முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எமது நிலையங்களில் எம்மை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என எல்லைக் கிராம மக்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே எல்லைக்கிராம மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
எங்கள் காணிகள் எங்கள் கண்களுக்கு முன்னே கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. எங்களுடைய நிலையங்களில் நாங்கள் வாழ்வதற்கு உரிமை இல்லை. ஆனால், எங்கிருந்தோ வந்த சிங்கள மக்கள் எமது நிலங்களில் குடியேற்றப்படுகின்றார்கள் என அந்த மக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.
பூர்வீக குடிகளான எமக்கு எந்த உதவித்திட்டங்களும் வழங்கப்படுவதில்லை. ஆனால், சட்டவிரோதமான முறையில் குடியேற்றம் செய்யப்படும் சிங்கள மக்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் கிடைக்கின்றன்.
இதனை அனைத்து அதிகாரிகளிடமும் வலியுறுத்திவிட்டோம். ஆனால், அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் எமது நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது தொடர்ந்து இடம்பெறுகிறது. தமிழ் அரசியல்வாதிகள் இதனைக் கண்டுகொள்ளாது தமக்காக சுயலாப அரசியல் ஆதாயங்களைப் பெறுவதிலேயே குறியாக உள்ளனர் எனவும் முல்லை எல்லைக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Post a Comment