யாழ்.போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்கும் நேரம் வரை வீதிகளில் காத்திருந்து பல்வேறு அசெளகரியங்களையும், ஆபத்துக்களையும் எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் முன்பக்க வாயில் ஊடாகச் செல்லும் பார்வையாளர்கள் ஆஸ்பத்திரி வீதியில் நண்பகல் 12 மணி வரை தகிக்கும் வெய்யிலில் ஒதுங்கி நிற்க இடமின்றி வீதியை ஆக்கிரமித்து காத்திருக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த வீதியில் மக்கள் குழுமி நிற்பதனாலும் அவர்கள் பயணித்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களும் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்படுவதாலும் அந்த வீதியால் பயணிக்கும் வாகனச் சாரதிகளும் பொது மக்களும் பல அசெளகரியங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
அத்துடன் விபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கு கிழக்குப் புறமாகவுள்ள சிறிய வாயிலூடாகவே பார்வையாளர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். "பாஸ்' நடை முறை இருப்பதால் அவ்விடத்தில் வைத்து பாதுகாப்பு ஊழியர்கள் "பாஸ்' அனுமதிச் சிட்டையை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான நடைமுறைகளினால் நீண்ட நேரம் காலை, மதியம்,மாலை என வெய்யிலையும் வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் சகித்துக் கொண்டு காத்திருக்க வேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த அசெளகரியங்களை நீக்குவதற்கு வைத்தியசாலையின் உட்பகுதி முற்றத்தின் ஒரு பகுதியில் தடுப்புவேலி ஏற்படுத்தி அதற்கு முன்பாக பார்வையாளர்கள் கூடி நிற்க அனுமதிக்கலாம். அனுமதிக்கப்படும் உரிய நேரம் வந்ததும் உட் செல்லும் நடை முறையைப் பின்பற்றுவது சுலபமாக இருக்கும் எனப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதே குறைபாடுகள் வைத்தியசாலையின் பின் பகுதி நுழைவாயிலான விக்ரோறியா வீதிப் பகுதியிலும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
Post a Comment