நெல்லை சந்திப்பில் இன்று மதியம் வங்கி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது28). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
ஆறுமுகத்தின் நண்பர் ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டியராஜ் நெல்லை சந்திப்பில் ஒரு தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார். அவரை பார்க்க இன்று மதியம் ஆறுமுகம் அங்கு சென்றார். ஆறுமுகம் வந்ததும் பாண்டியராஜ் அறையில் இருக்க சொல்லி விட்டு வெளியில் சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆறுமுகம் தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கொலை செய்தவர்கள் யார்? அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியரே ஆறுமுகத்தை கொலை செய்தாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஆறுமுகத்துடன் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த சுப்பு குட்டி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் சரிவர வேலை செய்யவில்லை என உயர் அதிகாரிகளிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் சுப்பு குட்டியை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இது தொடர்பாக முன் விரோதத்தில் சுப்பு குட்டி ஆறுமுகத்தை கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சுப்புகுட்டியை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது. நெல்லை சந்திப்பில் இன்று மதியம் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment