மதங்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க புதிய பொலிஸ் பிரிவு அமைக்கப்படும் என்று ஜனாதிபதியின் அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார். இலங்கையில் தற்போது இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் சில பிரிவினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து மத அலுவலக அமைச்சின் கீழ் புதிய பொலிஸ் பிரிவை அமைக்கும் யோசனையை ஜனாதிபதி அண்மையில் முன்வைத்தார். எனினும் இந்த பொலிஸ் பிரிவினால் மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுபல சேனா அமைப்பினர் தாம் உத்தியோகப் பற்றற்ற பொலிஸார் என ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ள சூழ்நிலையில் இந்தப் பொலிஸ் பிரிவை அவர்கள் கையாளக்கூடிய ஆபத்தும் ஏற்படலாம்.
அதேவேளை சட்டத்தை யாரும் தங்களது கைகளில் எடுப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் பொதுபல சேனா அமைப்பினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அட்டகாசம் புரிகின்றனர்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் வெறும் பார்வையாளராக இருந்து வருகின்றனர். அதேவேளை, மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு சில அமைச்சர்களும் காரணமாக இருக்கின்றனர்.எனவே இந்த விடயத்தில் நீதிமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment