மலையாள சினிமா வரலாற்றில் உண்மையாகவே இது பெரிய சாதனைதான். இதற்குமுன் வெளியான பிளாக்பஸ்டர் லிஸ்ட் அனைத்தையும் டர்ர்ர்ர் எனக் கிழித்தெறிந்து வென்றிருக்கிறது 'த்ரிஷ்யம்' திரைப்படம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'த்ரிஷ்யம்'. சென்ற ஆண்டின் இறுதியில் வெளியானது இத்திரைப்படம்.
குடும்பத்திற்காக ஒரு கொலையை மறைக்க முயலும் மிடில்கிளாஸ் குடும்பஸ்தனின் கதையை திரில்லர் கலந்து சொல்லும் படம். மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது இப்படம் நூறு நாட்களைக் கடந்து திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் 60 தியேட்டர்களில் தொடர்ந்து ஓடி 100 நாட்களைக் கடந்திருக்கிறது.
கேரள தியேட்டர்களில் மட்டும் 40 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 10 கோடி வசூலித்துள்ளது. சென்னை, பெங்களூரு, புனே, மும்பை போன்ற இடங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் ஷிப்டிங் முறையில் இன்னும் ஓடி வசூலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
தொலைக் காட்சி உரிமம், ரீமேக் உரிமம் அனைத்தையும் சேர்த்தால் 'த்ரிஷ்யம்' படத்தின் வியாபார மதிப்பு 100 கோடியை எட்டும் என்கிறார்கள். 100 நாட்களை கடந்து 100 கோடி வசூல் செய்த இந்த நூற்றுக்கு நூறு சாதனை மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை.
'த்ரிஷ்யம்' தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஒரே நேரத்தில் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் மலையாளப்படமும் 'த்ரிஷ்யம்' தான்.
தமிழில் இப்படத்தின் ரீமேக்கில் கமலஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment