வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 350 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்து நகைச்சுவை நடிகரான வடிவேலு, அரசியல் காரணங்களுக்காக மூன்றாண்டுகள் கட்டாய ஓய்விலிருந்தார். பின்னர் மூன்று படங்களில் நாயகனாக நடிக்க முடிவு செய்தார். அதில் ஒரு படம்தான் தெனாலிராமன். இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
சில பிரச்சினைகள் காரணமாக ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு திரையரங்குகள் தர தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் பின்னர் அனைத்து பிரச்சினைகளும் விலக, முதல் முறையாக வடிவேலுவின் படம் தமிழகத்தில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.
புறநகர்களில் சென்னையில் மட்டும் 30-க்கும் அதிகமான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புறநகர்களில் 40-க்கு மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. மல்டிப்ளெக்களில் இந்தப் படத்துக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியுள்ளனர்.
வெளியாகும் பெரும்பாலான அரங்குகளில் இந்தப் படத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் படத்துக்கு ஒரு வாரம் வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் தெனாலிராமன் படம் வெளியாகிறது. வடிவேலு படம் ஒன்று இத்தனை பிரமாண்டமாக, இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.
Post a Comment