டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, நள்ளிரவில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற இளம்பெண், ஒரு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதே போல இன்னொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டம் வைதான் என்ற இடத்தில் நடந்துள்ளது.
13 வயதே ஆன ஒரு சிறுமி வைதான் என்ற ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த கிராமமான ஜலதினிக்கு திரும்புவதற்கு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு பஸ் வந்தது. அதில் சிறுமி ஏறிக்கொண்டாள்.
அந்த பஸ்சில் டிரைவர் உள்பட 4 பேர் இருந்தனர். பஸ் நகர்ந்ததும் உள்ளே இருந்தவர்களில் ஒருவன், சிறுமியிடம் சில்மிஷம் செய்யத்தொடங்கினான். பின்னர் அவளை வலுக்கட்டாயமாக கற்பழித்தான். பின்னர் மற்ற 3 பேரும் ஒருவர்பின் ஒருவராக சிறுமியை கற்பழித்தனர்.
பின்னர் மயங்கிய அந்த சிறுமியை, ஓடும் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர். சாலையோரத்தில் உயிருக்கு போராடிய அந்த சிறுமியை, அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார் விரைந்து செயல்பட்டு, சில மணி நேரங்களில் குற்றவாளிகள் 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். இந்த தகவலை சிங்ராலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் சக்கரவர்த்தி உறுதி செய்தார். அந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் நல அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Post a Comment