யாழ்ப்பாணம் கல்விச் சமூகத்தின் திறவுகோலாக விழங்கும் யாழ்.பல்கலைக்கழகம் எந்தவிதமான காரணங்களுமின்றி 5 நாள்கள் மூடப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.வி. குகேந்திரன் (ஜெகன்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சுமுகமான சூழலில் சுதந்திரமாகத் தமது கல்விச்செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் பல்கலைக் கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், காரணம் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டை யாராலும் ஏற்கமுடியாது.
நாம் இன்றய காலத்தில் மாணவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு செயற்படவேண்டும். அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையான ஏணிகளாக இருக்கவேண்டும் எனபதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. கடந்த காலத்தில் எமது மக்களும் கல்விச் சமூகமும் அனுபவித்த கசப்பான விடயங்களையும், சம்பவங்களையும் மீண்டும் புதுப்பித்து மாணவர்களைத் தவறான வழியில் செல்வதைத் தடுக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இந்த கல்வி நிறுவனத்துக்கு உள்ளது.
ஆனாலும் பல்கலைக்கழகச் செயற்பாடுகளைக் காரணம் இன்றி இடைநிறுத்தி, மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றுவதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இந்த குழப்பத்துக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளிப்படையான காரணத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக உள்ளது. கல்வி நிறுவனங்களை மூடுதல் என்பது எமது மாணவ சமூகத்திற்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களின் இயல்பு நிலையையும் பாதிப்பதாகவே அமையும். எனவே இவ்வாறான மூடுதல்கள், பகிஸ்கரிப்புகளைக் கைவிட்டு மாணவர்களின் வளர்ச்சிப் பதைக்கு வழிகோலும் நடவடிக்கைகளை இந்த உயர்கல்வி சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் நிலைப்பாடாக உள்ளது - என்றுள்ளது.
Post a Comment