Home » » ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை

Written By Namnilam on Wednesday, May 7, 2014 | 6:58 PM

தமிழ்நாட்டில், காளை மாடுகளை பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயப் போட்டிகளுக்கு தடை விதித்து இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மனிதர்களின் கேளிக்கைக்காக, விலங்குகளை கொடுமைப்படுத்தி நடத்தப்படும் இது போன்ற போட்டிகளை அனுமதிக்க இயலாது என்று கூறிய நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.சி.கோஷ் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், காளை மாடுகளை இது போன்ற போட்டிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர எடுத்துள்ள முயற்சியையும் நிறுத்தி வைத்திருக்கிறது .

தமிழ்நாட்டில் கலாசார அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் நிகழ்வைத் தடை செய்ய வலியுறுத்தி, விலங்குகள் நல வாரியம் மற்றும் பேடா அமைப்பு வழக்கு தொடுத்தன.

நீண்ட கால பிரச்சனையாக விவாதிக்கப்பட்ட இந்த சர்ச்சையில், இரு தரப்புகளும் தங்கள் வாதங்களை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து முன்வைத்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த போட்டிகளை முறைப்படுத்தி புதிய கட்டுப்பாடுகளுடம் நடத்திட யோசனை தெரிவிக்கப்பட்ட போதும் அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் காளைகளை அடக்கும் நிகழ்வு ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரமாகக் கருதப்பட்டு வந்த சூழலில், இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில குறிப்பிட்ட அமைப்புகள், இந்த விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் மன்றாடுவோம் என்றனர். அதே சமயம் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போட்டிகளை நாங்கள் ஒரு போதும் நடத்த மாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger