வடக்கு மாகாண சபைக்கு வருமானமாக வரவேண்டிய பெரும் தொகை முத்திரை வரிப்பணம் தேவையற்ற முறையில் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் திறைசேரிக்குச் செல்வதாகப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சபை தனது பதவியைப் பொறுப்பேற்று சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகின்ற போதிலும் சபைக்கு வரவேண்டிய வருமானத்தைப் பெறும் வழிகளில் உரிய கவனத்தை செலுத்தாது வெறுமனே காலம் கடத்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் என்று வல்லுநர்களைக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கைகளில் மாகாண சபை இருந்தும்கூட இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் தவறிவிட்டனர் எனவும் குறைகூறப்பட்டுள்ளது.
முத்திரை வரியைப் பெறுவதில் வடக்கு மாகாண சபை நிர்வாகத்தினர் உரிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பணம் தரவில்லை; சபையில் பணம் இல்லை என்று காரணம் கூறுவதை விடுத்து அரசியல் சட்ட அங்கீகாரத்தின் கீழ் வடக்கு மாகாண சபைக்கு வரவேண்டிய வருமானத்தைப் பெற கூட்டமைப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் நான்கு கோடி ரூபாவுக்கு மேல் முத்திரை வரி திறை சேரிக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபை, முத்திரை வரியை அறவிடுவதற்கான சட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறிய காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த வருமானத்தை தமது ஆளுகைக்குள் வைத்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது, வடக்கு மாகாணசபையில் பிரதம நீதியரசர் ஒருவர் முதலமைச்சராக இருந்தபோதும், சபையில் இதுவரை எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment