பசுக்களை செயற்கையாக சினைப்படுத்துவதற்குரிய உபகரணங்களை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் சேவாலங்கா நிறுவனம் திங்கட்கிழமை (05) வழங்கியது. மல்லாவியிலுள்ள சேவாலங்கா நிறுவன அலுவலகத்தில் சேவாலங்காவின் துணைத்தலைவர் பேராசிரியர் அ.நவரட்ணராஜா தலைமையில் 15 மில்லியன் ரூபா உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் உறைநிலைச் சுக்கிலம், இனப்பெருக்க ஓமோன்கள், செயற்கை சினைப்படுத்தலுக்கான உபகரணங்கள் உள்ளன. 95 விழுக்காடு பசுக்கன்றுகள் பிறப்பதற்கான நிகழ்தகவைக் கொண்ட தெரிவுசெய்யப்பட்ட விந்தணுக்களைக் கொண்ட சுக்கிலத்தை சேவாலங்கா நிறுவனம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து உறைநிலையில் வரவழைத்து வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,
'உள்ளூர்ப் பசுக்களை நல்லினக் காளைகளை பயன்படுத்தி, இயற்கையாக சினைப்படுத்துவதால் அதிக பால் உற்பத்தியை தரக்கூடிய கலப்பு இனப் பசுக்களை உருவாக்கமுடியும்.
எனினும், இயற்கை இனக்கலப்பில் உருவாகும் கன்று பசுவாக இருப்பதற்கான நிகழ்தகவு ஐம்பதுக்கு ஐம்பது ஆகும். அத்தோடு, இயற்கை இனக்கலப்பை மேற்கொள்ளுவதற்கு நல்லினக் காளைகளுக்கு இங்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், தெரிவுசெய்யப்பட்ட விந்தணுக்களைக் கொண்ட இந்த உறைநிலைச் சுக்கிலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கால்நடை அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தப்படவுள்ளது' என்றார்.
Post a Comment