அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, அமெரிக்க மக்களின் தொலைபேசிகளையும், இன்டர்நெட் தகவல்களையும் உளவு பார்த்ததாக அதில் கம்ப்யூட்டர் நிபுணராக பணியாற்றிய எட்வேட் ஸ்நோடென் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜேர்மனி, பிரேஸில் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேச்சுகளையும் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி உளவு பார்த்ததால், அந்த நாடுகளின் அதிருப்தியையும் அமெரிக்கா சம்பாதித்தது. இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியின் புதிய தலைவராக மைக்கேல் எஸ்.ரோஜர் பொறுப்பேற்று உள்ளார். அவர் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் - "எட்வேட் ஸ்நோடென் தகவல் வெளியிட்ட பின்னர் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸிக்கும், தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு முற்றிலும் மாறி விட்டது. தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸிக்கு இன்டர்நெட் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்தார்.
ஆனால் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி முன்னாள் அதிகாரி ரிச்சேட், சமீபத்தில் பிரஸ் டிவி.க்கு பேட்டி அளித்தபோது - "கூகுள், மைக்ரோசொவ்ட் நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸிக்கு இப்போதும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.
இதற்காக அந்த நிறுவனங்களுக்கு உரிய நிதி அளிக்கப்பட்டு வருகிறது" - என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கூகுள், மைக்ரோசொவ்ட் ஆகிய நிறுவனங்களின் தேசபக்தி மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை தவிர மற்ற நாடுகளை உளவு பார்க்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment