Home » »

Written By Namnilam on Tuesday, September 23, 2014 | 6:06 PM

மண்டூர் மற்றும் கல்முனையில் விபத்து: இருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 9.00மணியளவில் மண்டூர் மாணிக்கப்பிள்ளையாரடியில் இடம்பெற்ற விபத்தில் சங்கர்புரத்தினை சேர்ந்த ஆறுமுகம் பெரியதம்பி (53வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு சங்கர்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியில் திரிந்த மாடுகளில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் மண்டூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
படுவான்கரை பகுதியில் பிரதான போக்குவரத்து பாதையில் இரவு வேளைகளில் மாடுகள் வீதியை மறித்து நிற்பதனால் அண்மைக்காலமாக விபத்து சம்பங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
கல்முனையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 10.15 மணியளவில் கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாய்ந்தமருது மார்கட் வீதியைச் சேர்ந்த மீராலெப்பை அப்துல் ஹமீத் என்பவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இவ்விபத்தில் படுகாயமடைந்த கல்முனை மாநகர சபை ஊழியரான முஹம்மத் முர்ஷித் என்பவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் இன்று இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் அம்பலத்தடி பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக சின்னத்தம்பி சோமசேகரம் (80வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி உயிரிழந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பிலான விசாரணையினை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger