கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி கோட்டத்தில் வகுப்பறைகள் எதுவும் இன்றி 5ம் ஆண்டுவரை கற்றல் கற்பித்தல் நிகழுகின்ற அவலம் மட்டுவில் நாடு அ.த.க பாடசாலையில் இடம்பெறுகின்றது.
42 மாணவர்கள் கல்வி கற்கின்ற இந்த பாடசாலையில் மாணவர்களுக்கான 11 மேசையும், 16 கதிரைகளுமே இருக்கின்றது. அத்துடன் வகுப்பறைக் கொட்டகைகள் எதுவும் கிடையாது.
அதிக வெண்மணல் செறிந்துள்ள அந்தப் பள்ளி வளாக முற்றத்தில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கற்பிக்கின்ற போதும் அவர்கள் குந்தியிருந்து கற்பிப்பதற்கும் ஆசிரிய மேசைகளோ கதிரைகளோ கிடையாது.
அதிபரது அலுவலகப் பொருட்கள், பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் சமையல் அறைக்குள் போட்டு மூடப்பட்டுள்ளது. இங்கு ஒரு கரும்பலகையும் கிடையாது.
இது பற்றி அங்கு படிக்கும் பிள்ளைகள் தெரிவிப்பது,
ஏற்கனவே அங்கு ஓர் கீற்றுக் கொட்டகை இருந்தது எனவும் அது கடந்த வருடம் ஆடி மாதம் தவறுதலாக எரிந்து போய்விட்டதாகவும், அதன் பின்னர் இன்று வரை ஓர் கீற்றுக் கொட்டகை தானும் போட்டுத் தரப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மட்டுவில் நாடு, நெற்புலவு ஆகிய கிராமங்களைச் சார்ந்த பிள்ளைகள் இங்கு கற்க வருகின்றனர்.இதே பூநகரிப் பிரதேசத்தில் அரசியல் காரணங்களுக்காக 54 மாணவர்கள் படிக்கின்ற பாடசாலை ஒன்றுக்கு 520 மாணவர்கள் கல்வி கற்கக்கூடியதான கட்டிடங்களையும் வள வாய்ப்புக்களையும் பெற்று கொடுத்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இப்பாடசாலைக்கு ஓர் கீற்றுக் கொட்டகை தானும் அமைத்து கொடுக்க முன்வரவில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புக்குரிய புலம்பெயர் சமூகமும் 42 பிள்ளைகளுக்கும் கல்வி கற்க உங்களால் முடியுமானவற்றை உதவ முன்வர வேண்டும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment