மாவிலாறு விவகாரத்தினை அப்போது தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணமென, இலங்கையின் முன்னாள் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தலைவரான உல்ப் ஹென்றிசன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியினிலே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை அரசும், அதனோடு ஒத்து ஊதும் சிலரும் முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையினாலேயே மீண்டும் யுத்தம் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்விவகாரங்களில் தொடர்பு பட்டவராக எனது கணவரும், அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவருமான எழிலனின் செயற்பாடுகளை சிலர் அண்மைக்காலமாக மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப்போடுவதாக பேசி வருகின்றனர்.
இத்தகைய அனைத்து தரப்பினரதும் கருத்துக்களுக்கும் பதிலளிப்பதாகவே இலங்கையின் முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு தலைவர் உல்ப் ஹென்றிசன் வழங்கிய செவ்வி அமைந்துள்ளது. மாவிலாறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க அப்போது எனது கணவர் விடுதலைப்புலிகளது தலைமையின் பணிப்புரையில் பாடுபட்டிருந்தார். அக்காலப்பகுதியில் இரு தரப்புகளிடையேயும் இணக்க நிலையினை ஏற்படுத்த முக்கிய பாடுபட்டவர் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு தலைவர் உல்ப் ஹென்றிசன்.
உண்மையில், இலங்கை அரசு தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்த்து வைக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. அதனாலேயே மாவிலாறு பிரச்சினையினை தீர்த்து வைக்காது கைவிட்டதுடன், வீணான சீண்டல்களிலும் ஈடுபட்டு, போரினை மீள ஆரம்பிக்க இலங்கை அரசே காரணம் என்பது தெளிவுபட அம்பலமாகியுள்ளது.
எனது கணவர் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் இதன் மூலம் அம்பலப்படுத்தப்படுகின்றது. சுமார் எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதும், தனது மனச்சாட்சிப்படி உண்மைகளை கூறிய இலங்கையின் முன்னாள் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தலைவர் உல்ப் ஹென்றிசனிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், அதனை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
அனந்தி சசிதரன் -எழிலன்
உறுப்பினர்
வட மாகாண சபை
Post a Comment