தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பினைத் தடுக்கும் நோக்கில் முல்லைத்தீவில் “காணி உரிமை மீட்புக்கான அமைப்பு” அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தத்தம் பிரதேச வாழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பிலும், அரசு மற்றும் அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனிநபர்-பொதுத்தேவை காணிகள் தொடர்பிலும் கலந்தாலோசித்த பின்னர் குறித்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
அமைப்பின் வழி நடத்தல் செயலராக வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனும், வழி நடத்தல் ஆலோசகர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் கனகசுந்தரசுவாமி, திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோரும், கிராம மட்ட செயல்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அமைப்பின் தீர்மானங்களாக:
நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அநுபவித்த காணிகளில், இராணுவம் பலாத்காரமாக குடியிருக்கும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்தும், அவர்களுக்கான காணி உரித்து பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாதிருப்பதை கண்டிப்பதோடு, அவர்களுக்குரிய காணி உரித்து பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
பிரதேசசபைகள், பாடசாலைகள், சனசமுக நிலையங்கள் என்பவற்றுக்குரிய காணிகள், கட்டடங்களில் குடியிருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றி அவற்றை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல். ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Post a Comment