கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவில் உள்ள வேம்பொடுகேணி அ.த.க. பாடசாலையை அண்டிய பகுதிகளில் மிதிவெடி அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே பாடசாலை வளாகத்தில் நடமாடுகின்றனர்.
பெற்றோரும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிஉள்ளது. எனவே இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலையின் மேற்குப் பக்கமாக பத்து மீற்றர் தூரத்தில் மிதிவெடிகள் உள்ளதாக அஞ்சப்படுகின்றது.
இத்தாவில் சந்தியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் பாடசாலை அமைந்துள்ளது. மாணவர்கள் நடந்து செல்லும் போது விளையாட்டாக வீதிக்கு வெளியே சென்றால் ஆபத்து ஏற்படலாம் எனப் பெற்றோர் கருதுகின்றனர். குறிப்பாக வீதியின் இடப்பக்கமான பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை எனவும் , இதனால் அப்பகுதியில் மிதிவெடிகள் இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. 162 மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கற்றலில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் மிதிவெடி அபாயத்தை அகற்றி அதற்கான உறுதிப் பத்திரத்தையும் அதிகாரிகள் வழங்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment