யாழ்.புத்தூர் பெரிய பொக்கணைப் பகுதியிலுள்ள நாளாந்த கூலி தொழிலாயான இரத்தினசிங்கம் துஷ்யந்தன் என்பவரது வீடு வெள்ளிக்கிழமை இரவு (28) முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த 3 இலட்சத்துக்கும் அதிமான பொருட்களும் தீயில் கருகியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் சனிக்கிழமை (01) தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த தொழிலாளிக்கு தற்காலிக குடிசையொன்றினை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் இன்று (01) அமைத்துக்கொடுத்து வருகின்றனர்.மேற்படி தொழிலாளியின் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி திடீரென வெடித்துள்ளதுடன் மின்சார இணைப்புக்களுக்கு தீ பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றுவிட்டனர்.
தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் தீயிணைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடாத நிலையில் வீடு முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த தொழிலாளியின் குடும்பம் தங்குவதற்காக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் தற்காலிக சிறிய குடிசையொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment