Home » » பள்ளி கழிவறையில் சிறைவைத்து வாலிபரை தாக்கிய மாணவர்கள்

பள்ளி கழிவறையில் சிறைவைத்து வாலிபரை தாக்கிய மாணவர்கள்

Written By Namnilam on Wednesday, March 12, 2014 | 1:45 PM

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அஜீத், தினேஷ், கிசூஷார், இரணியன் ஆகிய 4 பேரும் பள்ளியின் பின்புற கேட்டின் அருகில் அமர்ந்து இருந்தனர்.


அப்போது அதே பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் மோகன், ராஜ சேகர், தமிழன் மற்றும் சூர்யா ஆகிய 4 மாணவர்களும் பள்ளியின் பின்புற கேட்டின் மீது ஏறி குதித்து ரோட்டிற்கு சென்றனர். அப்போது அஜீத்தின் புத்தகப்பை சேதமானது. இது குறித்து அஜீத் பிளஸ்–1 மாணவர்களிடம் கேட்டார்.


உடனே மீண்டும் கேட் மீது ஏறி பள்ளிக்குள் வந்த பிளஸ்–1 மாணவர்கள் அஜித்தை சரமாரியாக தாக்கினர். இதில் அஜீத் முகத்தில் ரத்தம் வழிந்தது. மாலை நேரம் என்பதால் பள்ளியில் இருந்து அஜீத் வீடு திரும்பினார். வீட்டில் நடந்த சம்பவத்தை கூறினார்.


இதுகுறித்து அஜீத்தின் மாமா சுரேஷ் (வயது 25) பள்ளி தலைமை ஆசிரியருக்கு புகார் கொடுக்க வந்தார். இதையறிந்த மோகன், ராஜ சேகர், தமிழன் மற்றும் சூர்யா ஆகிய 4 பேரும் சுரேசை பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.


திடீரென 4 பேரும் சேர்ந்து சுரேசை தரதரவென இழுத்துக்கொண்டு பள்ளியின் பின்புறம் உள்ள கழிவறைக்குள் கொண்டு சென்றனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கினர். அந்த அறையில் வைக்கபட்டிருந்த ஜல்லி கற்களை எடுத்து சுரேஷின் முகத்தில் குத்தினர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் நடந்த சம்பவம் குறித்து செல்போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


இந்த சமயத்தில் பள்ளியில் தேர்தல் அலுவல் குறித்து ஆய்வு நடத்த ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் வந்தார். அவரை பார்த்ததும் மாணவர்கள் 4 பேரும் சுரேசை கழிவறையிலேயே அடைத்து சிறை வைத்தனர்.


இதுகுறித்து எதுவும் அறியாத மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது சுரேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் பள்ளியின் பின்புறத்தில் சுரேஷ் சிறை வைக்கப்பட்டிருந்த அறை நோக்கி வந்தனர். அவர்களை கண்டதும் பிளஸ்–1 மாணவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் சிறை வைக்கப்பட்டிருந்த சுரேசை உறவினர்கள் மீட்டனர். இதுகுறித்த கலெக்டரிடம் புகார் தெரிவிக்க முயன்றனர்.


அப்போது அங்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து சுரேஷின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறியாத கலெக்டர் சண்முகம் ஆய்வு முடிந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சில மணிநேரம் பரபரப்பு நிலவியது.


பின்னர் சுரேஷ் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் முகத்தில் ஆழமாக காயம் ஏற்பட்டிருந்ததால் 10 தையல்கள் போட்டனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதுகுறித்து சுரேஷின் உறவினர்கள் தாராபுரம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger