திருநின்றவூரில் அறை எடுத்து தங்கியிருந்து வேப்பம்பட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 2–ம் ஆண்டு படித்து வரும் ராமு இன்று காலை திருநின்றவூரில் இருந்து மின்சார ரெயிலில் கல்லூரிக்கு புறப்பட்டார். வேப்பம்பட்டில் ரெயில் நிலையத்தில் இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் சோதனை செய்தார். டிக்கெட் பரிசோதகரை பார்த்ததும் ராமு அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது டிக்கெட் பரிசோதகர் அவரை துரத்தி சென்று சட்டையை பிடித்து இழுத்தார்.
அந்த நேரத்தில் ராமு அவரை தட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயிலில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கல்லூரி மாணவர்கள் 1000–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். டிக்கெட் பரிசோதகரை கண்டித்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இருபக்க தண்டவாளங்களிலும் மாணவர்கள் அமர்ந்து கொண்டனர்.
இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில்களும், அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில்களும் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரசேகர், செவ்வாய்ப் பேட்டை இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால், சம்பவ இடத்துக்கு டிக்கெட் பரிசோதகர் வர வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கூறினார்கள். போலீசார் தொடர்ந்து பேச்சு நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். அங்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment