நோர்வே அஸ்கர் பாறும் தமிழர் இணையம் தாயகத்தில் வாழும் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக கிராமங்கள் தோறும் வழங்கி வருகின்றது.
அதன் இன்னொரு கட்டமாக இயக்கச்சி கோவில்வயல் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் அக்கிராமத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் சு.சுரேன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கோவில் வயல் பள்ளி முதல்வர், பச்சிலைப்பள்ளி பிரதேசபை உறுப்பினர் வீரவாகுதேவர், த.தே.கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், கட்சியின் கரைச்சி பிரதேச அமைப்பாளரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சு.தயாபரன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் மா.சுகந்தன் உட்பட கிராம மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றிய கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன்,
இன்னமும் நாம் பல்வேறு நெருக்குவாரங்களுக்குள் வாழ்கின்றோம். அதில் மிக முக்கியமானது எமது கல்வி அறிவை காப்பாற்றுவது. எப்போதுமே தமிழர்களின் மிக முக்கிய பெருமையும் மூலதனமுமாக இருந்துவந்தது கல்வி.
அது கடந்த காலங்களில் பெரும்போர் நெருக்குவாரங்கள் இருந்தபோதும் அது ஏதோ ஒரு கட்டமைப்பின் அடிப்படையில் வீழாது இருந்தது என்பது வரலாற்றுப் பதிவுகள். ஆனால் இன்றைக்கு போர் இல்லாவிட்டாலும் போருக்கு நிகரான கலாசார சவால்கள் எம் முன் மலையாக விரிந்து செல்கின்றது.
இதை வெல்ல பல்வேறு உபாயங்கள் இருந்தாலும் வாசிப்பும் எழுத்தும் இயல்பாக சிந்திக்க வைத்து ஒரு மாற்றத்தை கொண்டுவருமென நினைக்கின்றேன். எதை மாணவர்களுக்கு வாசிக்க ஊக்கம் கொடுப்பது அல்லது அவர்களின் கணப்படும் இடங்களில் எந்த வகையான வாசிப்புக்குரிய வகைகளை சேமிப்பது பேணுவது தொடர்பாக அறிவில் மூத்தவர்கள் சிந்திப்பதன் மூலம் நமக்காக மாற்றங்களை ஏற்படத்த முடியும் என கூறினார்.
Post a Comment