ஏ 9 வீதிக்கு அருகில் இயக்கச்சி கிராமத்தில் பொது மக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளது. இயக்கச்சி ஊர்கனிப்பற்றிலுள்ள 36 ஏக்கர் காணியை 552 ஆவது படைப்பிரிவின் இராணுவ படைத்தலைமையகம் அமைப்பதற்கு சுவீகரிக்கவுள்ளதாக தெரிவித்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஊடாக காணிச்சொந்தக்காரர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. காணி உரிமையாளர்களுக்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட காணியில் நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளோம். கடந்த கால போர் சூழல் காரணமாக நாம் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மாத்தளன், பொக்கனை வரை சென்று 2009 ஆம் ஆண்டு இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்று மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தோம். அதன் பின்னர் 2009 இல் எமது சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது எமது காணிகளில் இராணுவ முகாம் அமைந்திருந்தது.
எனவே எமது காணிகளை விடுவித்து தருமாறு பல தடவை பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தரும் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தற்போது எமது காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளது. எனினும் எமக்கு இதற்கு பதிலாக மாற்று காணிகளோ நஷ்டஈடுகளோ தேவையில்லை. எமது சொந்த காணியை விடுவித்து தரவேண்டும் என அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment