கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கான ஒழுங்குபடுத்தல்களை மீளாய்வு செய்யும் கூட்டம் நேற்று (28-02-2014) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது, கடந்த 15-02-2014 அன்று இடம்பெற்ற கூட்டத்தில், வருடாந்த உற்சவத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கான குறித்தொதுக்கப்பட்ட பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் எந்தளவில் அந்த பணிகளை நிறைவு செய்துள்ளனர் என்பது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, உற்சவத்திற்கான ஏனைய ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வருடந்தோறும் சிறப்பாக இடம்பெறுகின்ற ஆலய உறசவம், இவ் வருடம் வரும் பங்குனி மாதம் 10ம் தேதி ஆரம்பமாகி 17ம் தேதி நிறைவடையவுள்ளது. கடந்த வருட உற்சவம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இதற்காக திணைக்களங்கள் முதல் அனைவரும் தங்களின் சிறப்பான பாராட்டத்தக்க வகையில் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் வீதி செப்பணிடல்,போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, ஆலய சூழல் துப்பரவு செய்தல், வாகன பாதுகாப்பு, வியாபார நடவடிக்கைகள், கழிவகற்றல் உள்ளிட்டபல விடயங்கள் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் எடமன்மகேந்திர, கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஜெயானந்தன், வலய கல்விப் பணிப்பாளர் முருகவேல், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் ஜெயராசா, கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, வீதி அபிவிருத்தி சபையின் பொறியியலாளர் இராஜன், கண்டாவளை கோட்டக்கல்வி அதிகாரி இராஜகுலசிங்கம், கண்டாளை பொறுப்பு மருத்து அதிகாரி, சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள், ஆலய பரிபாலனசபை தலைவர் வீ.இராமநாதன் செயலாளர் வைரமுத்து, ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment