நெடுந்தீவில் மின்சாரம் தாக்கி 13 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் இடம் பெற்றபோதும் பொலிஸார் நேற்று இரவு சுமார் 7 மணியளவிலேயே பதில் நீதி வானுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அதனால் சிறுவனின் சடலம் அகற்றப்படாது இதுவரை சம்பவ இடத்திலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினமே அந்த இடத்திலிருந்து சடலம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நெடுந்தீவு 5 ஆம் வட்டாரத்தில் நேற்றுக் காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: நெடுந்தீவில் நேற்று அதிகாலை தொடக்கம் மழை பெய்துள்ளது. அதனால் சம்பவ இடத்திலுள்ள ஆலமரம் ஒன்று சரிந்து மின்கம்பியில் முட்டியவாறு இருந்துள்ளது. அதில் பனையோலை ஒன்று காணப்பட்டமையால் அதனை எடுப்பதற்குச் சிறுவன் முற்பட்ட போதே மின்தாக்குதலுக்கு இலக்காகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனைக் காணாது பெற்றோர் தேடியபோதே சிறுவன் உயிரிழந்தமை தெரியவந்தது. சிறுவனின் உடல் அந்த இடத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment