கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் காணியற்ற மக்களின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, அம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வடக்கச்சி ஐந்து வீட்டுத்திட்டப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கு காணியற்ற மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, அந்த மக்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காணியினையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போதே அங்கு வருகைதந்துள்ள மக்களிடம் மேற்படி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டக்கச்சி மற்றும் பளை பிரதேசங்களில் காணியற்ற மக்களின் காணி பிணக்குகளை தீர்க்கும் வகையில் வனவள திணைக்களத்தின் அனுமதியினை கோரியிருந்தோம். ஆனால், பளை பிரதேசத்தில் நாம் கோரிய இடத்திற்கான அனுமதி கிடைத்துவிட்டது. வடக்கச்சி பிரதேசத்தில் மாத்திரம் வனவள திணைக்களம் இங்கு அடர்ந்த காடுகள் எனவும், அந்த காடுகளை அழிக்க முடியாது எனவும் அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள்.
எனவே, இந்த பிரதேசத்திற்கான அனுமதியினை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும், தற்போது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான் இன்று நேரடியாக இந்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளேன். வனவள திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டது போன்று அடர்ந்த காடுகள் இங்கு இல்லை. அதனை புகைப்படமும் எடுத்துள்ளோம்.
விரைவில், நான் நேரில் பார்த்த நிலைமையினை புகைப்பட ஆதாரத்துடன் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று காணி வழங்குவதற்கான அனுமதியினை பெற்று, காணியற்ற மக்களுக்கு அரச காணி சட்டதிட்டங்களுக்கு அமைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கிடையில் வீட்டுத்திட்டம் முடிவடைந்து விடும் என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை. காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட இந்த பிரதேசத்திற்கான வீதி, மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட உட்கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு, இந்த பிரதேசத்தை ஒரு மாதிரி கிராமமாக மாற்றுவோம் என தெரிவித்தார்.
இவ் விஜயத்தின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன், பளை பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன், கிராம அலுவலர் சத்தியநாதன், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment