பொதுவாக சீடை குட்டியாக இருக்கும். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சீடை நீளமாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் இனிப்பு மற்றும் உப்பு என்ற இரண்டுமே கலந்திருக்கும். இதனால் இவை வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும். மேலும் இது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் அரிசி மாவு சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் உப்பு, சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் அரிசி மாவு மெதுவாக சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட்டு, இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது குளிர்ந்ததும், அதில் ஓமம் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு பிசைய வேண்டும். பின்பு அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, நீளமாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஆந்திரா ஸ்டைல் அரிசி மாவு சீடை ரெடி!!!
Post a Comment