Home » » தென்னாபிரிக்காவின் அனுசரனைக்கு ஒத்துழைப்போம், சம்பந்தன்

தென்னாபிரிக்காவின் அனுசரனைக்கு ஒத்துழைப்போம், சம்பந்தன்

Written By Namnilam on Wednesday, April 16, 2014 | 10:48 AM

கடந்த மூன்று தசாப்தகாலமாகப் போர் நடைபெற்ற இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு இங்கு நடந்தேறிய கறைபடிந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். அதனைத் தென்னாபிரிக்கப் பயணத்தின் போது அந்த நாட்டு முக்கியஸ்தர்களிடம் நாம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.


கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை  தென்னாபிரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கொண்ட கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கடந்த 13ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியது.   அந்தப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே தென்னாபிரிக்க ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருப்போம். அதற்கேற்றவாறு எமது பங்களிப்புகளை வழங்குவோம். நாம் இனியும் ஏமாறத் தயாரில்லை.'' என்றும் அவர் குறிப்பிட்டார்.


இது குறித்து அவர் மேலும் கூறும் போது, ""எமது தென்னாபிரிக்கா பயணம் ஆக்கபூர்வமாக திருப்தியாக அமைந்தது. நாம் சொல்ல வேண்டிய விடயங்கள் அனைத்தையும் தென்னாபிரிக்க அரச தரப்பினரிடம் தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டோம்.   இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தீர்வைக் காண்பதற்கும் தென்னாபிரிக்க அரசு  முன்வந்துள்ளது. இந்நிலையில், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி  ஜேக்கப் சூமா விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளார். அவரின் பெயர் சிறில் ரமபோ­.


எமது பயணத்தின் போது ரமபோ­வை நாம் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளோம். அத்துடன் தென்னாபிரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார பிரதியமைச்சர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஆகியோரையும் நாம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம்.   தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அவர்கள் அரச படைகளின் தொந்தரவுகள் எதுவுமின்றி  சகல உரிமைகளுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை தென்னாபிரிக்காவிடம் நாம் எடுத்துக் கூறியுள்ளோம்.


தென்னாபிரிக்காவின் இந்த நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். இதற்கு எமது  ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.   ஆனால், இலங்கை அரசு இதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமா என்பதில் எமக்கு சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருப்போம். அதற்கேற்றவாறு எமது பங்களிப்புகளை வழங்குவோம். நாம் இனியும் ஏமாறத் தயாரில்லை என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger