போர்க் காலத்தில் காணாமற் போனவர்கள் என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பதிவு செய்யப்பட்ட சில சாட்சியங்களுக்கு எதுவித ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச.
ஒரு சில குடும்பங்களில் 9 அல்லது 10 பேர் வரையில் காணாமற்போயிருப்பதால் அந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த சிலரது சாட்சியங்களை விசாரணை செய்யும் போது, காணாமற்போனவர் எப்படிக் காணாமற்போனார்? அல்லது எங்கே காணாமற்போனார்? போன்ற எந்தவொரு தகவல்களும் இல்லை. அதனால் மேற்படி முறைப்பாடுகளை விசாரணை செய்வதில் மிகப்பெரிய இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் தம்மால் இயன்ற விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
காணாமற்போனோரின் உறவினர்கள் பெரும்பாலும் இறப்புச் சான்றிதழை ஏற்க மறுக்கின்றனர். அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும். ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர் போதிய தகவல்களைத் தரவில்லை. ஆனாலும் ஆணைக்குழு தமது உறவினர்களைக் கண்டுபிடித்து தரும் என்று நம்புகின்றனர். இத்தகைய குடும்பங்களுக்கு மன நல ஆலோசனை வழங்குவது தொடர்பில் ஐ.சி.ஆர்.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment