திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேச மக்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய 9வது ஆண்டை இன்று சனிக்கிழமை நினைவுகூர்ந்த அதேவேளை சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். சம்பூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இந்த சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாகவே அந்த பகுதியிலுள்ள குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த 2005-ம் ஆண்டில் இராணுவ தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா மீது கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து சம்பூர் பிரதேசத்தில் விமானத் தாக்குதல்களும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.
சம்பூரில் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தற்போது உயர் பாதுகாப்பு வலயம், பொருளாதர முதலீட்டு வலயம் மற்றும் இந்திய அனல் மின் நிலையம் என்று அரசாங்கத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதால் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்விடங்களையும் பிரதேசத்தையும் விட்டு வெளியேறிய சுமார் 900 குடும்பங்கள் கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், பட்டித்திடல் உட்பட மூதூர் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் தங்கியுள்ளன.
தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த 9 வது ஆண்டை நினைவுகூர்ந்த மக்கள், மீள்குடியேற்ற விவகாரத்தில் அரசாங்கத்தினாலும் வெளிநாடுகளினாலும் பல்வேறு அமைப்புகளினாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமது கவலையை வெளிப்படுத்தினார்கள்.
Post a Comment