மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகள் குறித்த ஐ.நா. பொதுச்செயலாளரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் “பெண்கள் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட திறந்த விவாதத்தில் உரையாற்றிய இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வியாழக்கிழமை ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளில் பாலியல் வல்லுறவுகள் தொடர்வதாக கூறப்பட்டிருந்தது. எனினும், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சில அமைப்புகள் இராணுவத்துக்கு எதிரான தவறான கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் படையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில், போரின் போது 5 சம்பவங்களில் 7 படையினரும், போருக்குப் பின்னர், 6 சம்பவங்களில் 10 படையினரும் பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment