மராட்டிய மாநிலம் துலேயில் நேற்று பா.ஜனதா சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறுகிறார். அவர் என்னிடம் சவால் விடுவதற்கு முன்பு, மராட்டிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை குஜராத் சென்று ஏன் விற்பனை செய்கிறீர்கள்? என்று விவசாயிகளை பார்த்து கேட்க வேண்டும்.
மராட்டிய விவசாயிகள் குஜராத்தில் வணிகம் செய்வதற்கு ஏதுவாகவும், சம்பாதிக்கும் தொகையை சேமிப்பதற்கு உதவியாகவும் நான் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுத்து இருக்கிறேன்.
இங்கு (துலே) ரெயில்வே தண்டவாளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருப்பினும், காங்கிரஸ் அரசு அதை கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் பொதுமக்களுக்காக என்ன தான் செய்தார்கள்? காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், எதுவும் செய்யவில்லை என்பதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மராட்டிய அரசியல் நிலவரம் பற்றி சரத்பவார் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்று தான் அவர் 6 மாதத்துக்கு முன்பே, தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்தார். அவரது மகளுக்கு (சுப்ரியா சுலே) இன்னமும் நிறைய காலங்கள் இருக்கிறது. ஆகையால், அவர் தோற்று போனாலும் அது பெரிய விஷயம் இல்லை.
தோல்வி பயத்தால் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை இழந்து தவிக்கின்றனர். அவர்களது உடல் மொழியும் (பாடி லேங்குவேஜ்) மாறிவிட்டது. அவர்களது தலைவிதி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, வலிமையற்ற அரசை வாக்காளர்களாகிய நீங்கள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
ஏழை மக்களின் அவலநிலை எனக்கு நன்றாக புரியும். டீ விற்று தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். எனது தாயார் மற்ற வீடுகளில் சென்று, பாத்திரங்கள் கழுவி என்னை வளர்த்தார்.
மேலும், நான் அம்பேத்கரின் வழிமுறையை பின்பற்றுகிறேன். ஆகையால், உங்களது பிரச்சினைகளை என்னைவிட வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
Post a Comment