இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடாது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும்.
செய்முறை :
விரிப்பில் இரு கால்களையும் ஒன்றாக வைத்து நிற்க வேண்டும். கைகள் தளர்வாக பக்கவாட்டில் இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேலே உயர்த்தியபடியே, குதிகாலை உயர்த்த வேண்டும். தலைக்கு மேல் கைகள் சென்றதும், கைகளைப் பிணைத்து முடிந்த வரை முதுகை வளைக்க வேண்டும்.
ஓரிரு விநாடிகளுக்குப் பின் மூச்சை வெளியே விட்ட படி கைகளையும் குதிகால்ளையும் ஒன்றாகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்:
உடலின் அனைத்து தசைகளும் இழுக்கப்பட்டு, நல்ல ரத்த ஓட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாகிறது. தரைகளை வலுவடையச் செய்கிறது. முதுகெலும்பு பலம் அடைவதால், ஆரோக்கியம் கூடுகிறது.
கணுக்கால்கள், கெண்டைக்கால், கைகள், தோள்பட்டை தசைகள் கூடுதலாக இழுக்கப்படுவதால் வளரும் பருவத்தினருக்கு ஏற்றதாக அமையும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சி அடையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்முறை:
* நேராக நில்லுங்கள். நேராகப் பாருங்கள்.
* கைகள் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி இருக்கட்டும்
* இரு கால்களும் உடல் எடையைச் சமமாகத் தாங்கியிருக்க வேண்டும்.
* முழங்கால் சிப்பு மேலே நோக்கித் தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.
* தொடைகளும் பின்புறத் தசைகளும் இறுகிய நிலையில் இருக்க வேண்டும்.
* மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி கைகளை மேலே தூக்குங்கள்.
* மேலே செல்லும் கைகள் நேராகவும் விண்ணென்றும் இருக்க வேண்டும்.
* கால்களின் நிலை மாறக் கூடாது.
* தோள்களுக்கு நேரே கைகள் வந்ததும் முழங்கைகளை மடக்கிக் கைகளைக் கூப்பவும்.
* கூப்பிய கைகளின் அடிப்புறம் நேராக, பூமிக்கு இணையாக இருக்க வேண்டும்.
* மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.
* மூச்சை மெல்ல இழுத்தபடி மெதுவாகக் கையைத் தலைக்கு மேல் உயர்த்துங்கள்
* உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி இருக்க வேண்டும்.
* கைகளை முடிந்தவரை மேல் நோக்கி இழுத்தபடி குதிகால்களை மேலே தூக்குங்கள்.
* தலையை மேல் நோக்கியபடி உயர்த்துங்கள்
வெளியேறும் விதம்
* குதிகாலைக் கீழே இறக்குங்கள்.
* மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி கைகளைத் தளர்த்துங்கள்.
* கைகளைக் கீழே தொங்கப் போடலாம் அல்லது கூப்பிய நிலையில் மார்பை ஒட்டி வைக்கலாம்.
* மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தபடி கைகளையும் குதிகாலையும் தூக்கவும்.
* பிறகு பழைய நிலைக்கு வரவும்.
* நான்கைந்து முறை இதைச் செய்யலாம்.
* விரல்களைக் கோத்தபடியும் கைகளை மேலே தூக்கலாம்.
பலன்கள் :
* நின்ற நிலையில் செய்யும் ஆசனங்களுக்கெல்லாம் இது அடிப்படையானது.
* இது உங்கள் உடலின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. நிமிர்ந்த தோற்றத்தைப் பெற உதவுகிறது.
* உடலின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.
* பதற்றம் தணிந்து மனஅமைதி பெற உதவும்.
* உடலின் எல்லாத் தசைகளும் புத்துணர்ச்சி பெறும்.
* தொடர்ந்து செய்துவந்தால் முதுகு வலி குறையும்.
* தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறையும்.
* கணுக்கால்கள், தொடைகள், அடி வயிறு, முதுகு வலுப்பெறும்.
* நின்று செய்யும் ஆசனங்களைச் செய்ய இந்த ஆசனப் பயிற்சி உதவும்.
எச்சரிக்கை :
* தோள்பட்டையில் காயமோ, நாள்பட்ட வலியோ இருந்தால் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
* தலைவலி, தலைசுற்றல், தூக்கமின்மை, குறைந்த ரத்த அழுத்தம் முதலிய உடல் உபாதைகள் இருப்பவர்கள் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
Post a Comment