பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சனிக்கிழமை தென்னாபிரிக்காவின் அதிபராக 2 ஆவது முறையாகப் பதவியேற்ற ஜகோப் சுமா அந்நாட்டில் வளர்ந்து வரும் சமூகங்களுக்கிடையேயான சமத்துவமின்மை போராட்டத்தின் மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
ப்ரெட்டோரியாவின் யூனியன் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போதே அவர் விவரமாக இவ்வாறு கூறியுள்ளார். இரண்டாவது தடவை பதவியேற்கும் நான் இந்நிகழ்வை தென்னாபிரிக்காவில் நிறவெறியில் இருந்து தேசிய ஜனநாயக சமூகத்தை நோக்கி பயணிக்கும் மாற்றத்தின் தொடக்கமாக இதனைக் கருதுகின்றேன்! இன்றிலிருந்து தொடர்ந்து 5 வருடங்களுக்கு தீவிர சமூக பொருளாதார மாற்றக் கொள்கைகள் செயற்படுத்தப்படும் என உறுதியளிக்கின்றேன், என்றார்.
அதிபர் ஜகோப் சுமாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இம்மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொருளாதாரத் துயரங்கள், சுரங்க உயிரிழப்பு எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் வெற்றியைச் சந்தித்துள்ளது. மேலும் இக்கட்சி 62% வீதமான வாக்குகளைப் பெற்ற போதும் இது கடந்த முறை பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட குறைவு எனப்படுகின்றது. இருந்த போதும் ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தொடர்ந்து 20 வருடங்களாக மிகப் பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய அதிபர் குட்லுக் ஜொனாதன் மற்றும் சிம்பாப்வே அதிபர் ரோபேர்ட் முகாபே ஆகியோரும் சனிக்கிழமை இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தனர்.
Post a Comment