உக்ரைனில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ‘சாக்லெட் கிங்’ என அழைக்கப் படும் கோடீஸ்வரரான பெட்ரோ பொரொஷெங்கோ பெரும்பான்மை வாக்குகளால் (54% வீத வாக்கு) வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய போட்டியாளரான முன்னால் பிரதமர் வெறும் 13% வீத வாக்குகளையே பெற்றிருந்தார்.
பெட்ரோ பொரொஷெங்கோ இனிப்பு தின்பண்டங்கள், சாக்லெட் ஆகியவற்றின் உற்பத்தியில் வெற்றிகரமாகத் தடம் பதித்து கோடிஸ்வர தொழிலதிபராக உயர்ந்தவர் என்பதுடன் அரசியலிலும் நீண்ட கால அனுபவம் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து பெட்ரோ கூறுகையில், 'நான் மேற்கத்தேய நாடுகளுடனான அரசியல், பொருளாதார நல்லுறவைத் தடங்கல் இன்றித் தொடர்வேன்! அது மட்டுமல்லாது எமது நாட்டுக்கு ஏற்றுமதி வருமானம் மற்றும் முக்கிய எரிசக்தி வழங்குனராகச் செயற்பட்டு வரும் ரஷ்யாவுடன் சிதைந்துள்ள உறவுகளை சீர்படுத்துவேன்!' என்றுள்ளார்.
இதேவேளை புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறுகையில், மக்களின் முடிவை ரஷ்யா மதிக்கும் ஆயினும் வாக்களிப்புக் கொடுத்து சில விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவுள்ளன என்றார். மறுபுறம் பொருளாதாரச் சரிவை சீர்படுத்துதல், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் பிரிவினை ஏற்படுத்தாமல் தடுப்பது ஆகிய எதிர்பார்ப்புக்களை பெட்ரோ மீது மக்கள் சுமத்தியுள்ளனர்.
Post a Comment