முக்கொலைச் சந்தேக நபரை ஒப்படைக்குமாறு கோரி, யாழ். அச்சுவேலிப் பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் தயாராகிக் கொண்டிருந்தபோது பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து, பொதுமக்களை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிற்கும் படி கூறிய பொலிஸார், பொலிஸ் நிலைய வாயிலில் வைத்து குறித்த சந்தேகநபரை காட்டிவிட்டு மல்லாகம் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், மல்லாகம் நீதிமன்றத்திலும் பெருமளவு பொதுமக்கள் சூழ்ந்திருப்பதினால், அங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. யாழ்.அச்சுவேலி முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு மல்லாகம் நீதிமன்றம் 11நாள் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்குட்படுத்தும் தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது.
நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உறக்கத்திலிருந்த சமயம் கண்மூடித்தனமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கோப்பாய் பொலிஸார் சம்பவ தினத்தன்று கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நேற்றய தினம் அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் காலை குறித்த சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் முன்னால் ஆஜர்ப்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மேலும் சந்தேக நபரை காண்பிக்குமாறும், தங்களிடம் ஒப்படைக்குமாறும் மக்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய நீதிபதி, சந்தேக நபரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment