கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக செவ்வாய்கிழமையன்று கூடியபோது இறுதி கட்ட போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் முள்ளிவாய்க்கால் தினம் நினைவுகூரப்பட்டது.
சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபை அமர்வை ஆரம்பித்து நிகழ்ச்சி நிரலை அறிவித்தபோது, எதிர்க்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி குறுக்கிட்டு இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரி சில நிமிடங்கள் உரையாற்றினர்.
இன்றைய அமர்வுக்கு வழமைக்கு மாறாக கறுப்பு சால்வை அணிந்தவாறு சபைக்கு சமூகமளித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவ்வேளை எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுந்துநின்ற வேளை முதலமைச்சர் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என ஏனையோர் தமது ஆசனங்களில் அமர்ந்தவாறு காணப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவரின் உரை முடிவடையும் நேரத்தில் குறுக்கீடு செய்த தவிசாளர் ஆரியவதி கலப்பதி, இந்த விடயம் சபையின் அனுமதி இன்றி நடந்த விடயம் என சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்திருந்ததார். ஆளும் கட்சி உறுப்பினரொருவர் விடுதலைப்புலிகளை இங்கு நினைவுகூர முடியாது என கூறியபோது, உயிரிழந்த மக்களையே தாம் நினைவுகூர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதிலளித்திருந்தனர்.
Post a Comment