Home » » "ஐஸ்" என்னை ஏமாற்றிவிட்டார், இலங்கையர் முறைப்பாடு

"ஐஸ்" என்னை ஏமாற்றிவிட்டார், இலங்கையர் முறைப்பாடு

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 1:33 PM

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயுடன் தான் தொடர்புகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் இந்திய நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் இலங்கையர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.


அதற்கான நட்டஈட்டை ஐஸ்வர்யா ராயிடம் பெற்றுக்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்யுமாறு மருமகன் எனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் வழக்கு தாக்கல் செய்வதற்காக கொடுத்த 1.7 மில்லியன் ரூபாவை மருமகன் மோசடி செய்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது தாய்வானில் வசித்து வரும் நிரோஷன தேவப்பிரிய என்பவரே இவ்வாறு முறைப்பாடொன்றை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பிரபல பொலிவூட் நடிகை ஐஸ்வரியா ராயும் நானும் தொடர்பு கொண்டிருந்தேன். ஆயினும், அவர் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்தமையினால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டேன்.


இவ்வாறு ஏமாற்றப்பட்டதன் பின்னர் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அவ்வாறு உள்ளானதற்காக ஐஸ்வர்யா ராயிடம் நட்டஈடு கோரவேண்டும் என எண்ணினேன். அதனடிப்படையில் இலங்கையில் பாணந்துறையில் வசித்து வரும் எனது மருமகனான ரொஷான் அஜித்திடம் இவ்விடயம் குறித்து தெரிவித்தேன்.


இப்பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறிய மருமகன், இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வதென்றால், சட்டத்தரணிக்கு செலுத்துவதற்கும், வழக்கு சம்பந்தமான மற்றைய அனைத்து செலவுகளுக்கும் 1.7 மில்லியன் ரூபா அவசியம் என்றும் அத்தொகையை தன்னிடம் தருமாறும் கேட்டார்.


அந்த பணத்தை நான் செலுத்தியிருந்தும் அவ்வாறான வழக்கிற்கான எந்தவொரு நடவடிக்கையும் மருமகன் எடுக்கவில்லையென தெரியவந்தது. அதன் பின்னரே இம்முறைப்பாட்டை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மோசடி செய்ததாக கூறப்படும் நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, தான் மோசடி செய்த பணத்தை தவணைமுறையில் திருப்பிக்கொடுப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ரூ.500,000 இரண்டு சரீரப்பிணையில் அவரை நீதவான் திலின கமகே விடுதலைச்செய்தார்.


தான் மோசடி செய்த பணத்தில் மாதாந்த தவணைக்கட்டணமாக ஒரு மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger