புலிகளை இல்லாதொழித்து விட்டதாகத் தெரிவித்து அரசாங்கம் பெரும் செலவில் ஆண்டு தோறும் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றது. எனினும், இம்முறை புலி இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதனால் கொண்டாட்டங்களை நடத்த முடியாது என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போரை விரும்புவோருக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருகிறது.முப்பது ஆண்டுகள் போர் நீடித்த இலங்கையில், மீளவும் யுத்தம் அவசியமில்லை. சில குழுவினருக்கு மீண்டும் போர் தேவைப்படுகிறது.
எனினும், அரசாங்கம் இவ்வாறான குழுக்களுடன் இணைந்து செயற்படுகின்றமை வருத்தமளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கோயில்கள் உடைக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதியும் பொலிஸாரும் திடீரென விழித்துக் கொண்டு இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர். நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்ற முஸ்லிம் கடும்போக்குடைய அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பே பௌத்த மதத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment