யாழ். மாநகரசபையில் தற்போதைய நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான குழுவொன்றை நியமித்து, விசாரணை செய்ய வடக்கு மாகாண முதல்வர் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது. யாழ். மாநகர சபையின் தற்போதைய நிர்வாகக் காலம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் பூர்த்தியாகியிருந்தது. எனினும் அது பின்னர் அரசினால் இந்த வருடம் ஓகஸ்ட் 31 வரை ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டது. இந்நிலையில் சபையின் தேர்தலை நடத்துமாறு அண்மையில் வடமாகாணசபையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக, தொடர்ச்சியாக வடமாகாணசபையில் முன்வைக்கப்பட்ட மாநகரசபை முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் உறுதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பாக முதலமைச்சர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விசாரணைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
Post a Comment