ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்கையில், 17–வது ஓவரின் போது மும்பை அணி பேட்ஸ்மேன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்), பெங்களூர் அணி பந்து வீச்சாளர் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடும் மோதலாக வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த பொல்லார்ட், ஸ்டார்க்கை நோக்கி ஆக்ரோஷமாக பேட்டை வீசினார். கைநழுவியதால் ஸ்டார்க் தலைதப்பினார். நடுவர்களும், சக வீரர்களும் சமாதானப்படுத்தினார்கள்.
மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தகராறு குறித்து போட்டி நடுவர் விசாரணை நடத்தினார். இருவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொல்லார்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதமும், ஸ்டார்க்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
வீரர்கள் களத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் வெட்டோரி அதிருப்தி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஆடுகளத்தில் இதுபோன்ற பிரச்சினை பார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment