புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசு, பயங்கரவாதத்தை மீள எழுச்சிபெறவைப்பதற்கு உதவுகின்றன என்று குற்றம் சாட்டி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்துள்ளது. இவ்வாறான தடை அறிவிப்புக்கான வலுவான ஆதாரங்கள் எவையும் இல்லை.
தேசிய பாதுகாப்புக்கு வன்முறை மூலம் அச்சுறுத்தல் வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உரிமை உண்டு என்ற அதேசமயம் வடக்கு,கிழக்கு பகுதிகளில் பிற்போக்குத் தனமான நடவடிக்கைககளில் அரசு ஈடுபட்டு வருவதால் அவை மீள் நல்லிணக்கத்துக்கு எதிரானவையாகவே அமையும் என நாம் கருதுகிறோம். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பை அடிப்படையாக வைத்தே தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்ற சிந்தனையைக் கூட்டமைப்பு கொண்டுள்ளது.
இவ்வாறான அணுகுமுறைகளுக்கு, தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில அமைப்புக்கள் துணைகிற்கின்றன. எனவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று நாம் கோருகிறோம். என்று தெரிவித்துள்ளார். உலக தமிழர் பேரவை (GTF) , பிரித்தானிய தமிழர் பேரவை ( BTF) , மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE) உள்ளிட்ட 16 அமைப்புக்களுக்கும் 424 தனிமனிதர்களுக்கும் தடைவிதித்து இலங்கை அரசு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment