பருத்தித்துறை, ஸ்ரீ இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் ஸ்தாபகரும் அதனை நெறிப்படுத்தி வந்தவருமான சுவாமி சித்ரூபானந்தா (வயது 77) இன்று பெளர்ணமி தினத்தன்று பிற்பகலில் ஆச்சிரமப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அமரத்துவம் அடைந்தார். அவரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன.
1970 ஆம் ஆண்டு துறவறம் பூண்டு சிறிய கொட்டகையில் தமது ஆச்சிரமத்தை அவர் தொடக்கி வைத்தார். அப்போது அவரது இயற்பெயர் பி.இரத்தினசபாபதி. 1975 இல் வடஇந்தியாவுக்கு திருத்தல யாத்திரை சென்ற அவர் அங்கு சந்நியாசம் பூண்டு சுவாமி சித்ரூபானந்தா என்ற நாமத்துடன் திரும்பினார். பருத்தித்துறை வல்லிபுரப் பரியாரியார் ஒழுங்கையில் கலட்டி என்ற இடத்தில் அவரது ஆச்சிரமம் அமைக்கப்பட்டு நன்கு விருத்தி செய்யப்பட்டது.
பல்வேறு சமய, சமூகப் பணிகளை ஆற்றி வந்த அவர் அதன் ஒரு பங்காக பெளர்ணமி தோறும் ஆச்சிரமத்தில் அன்னதானம் வழங்கும் பணியையும் தவறாது மேற்கொண்டு வந்தார். இன்றும் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயம் திடீரென மயங்கிச் சாய்ந்தார். அதை அடுத்து அங்கேயே அவர் தேகவியோகம் அடைந்தார். அவரது பூதவுடல் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பருத்தித்துறை முனைப் பகுதியில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது
Post a Comment