அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் பட்டியல் பதிவின்போது, வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள், அந்தந்த மாவட்டங்களில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த - தற்போது இந்த மாவட்டங்களுக்கு வெளியே வாழ்கின்ற - எங்களின் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம். தயவு செய்து வருகிற மாதம் இடம்பெறவுள்ள வாக்களர் பட்டியல் பதிவின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் உங்களின் வீடுகள் இருக்குமானால் அங்கு சென்று உங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு சில வாக்காளர் பதிவின் மூலமாகக் கூட ஓர் ஆசனத்தை அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இதனால் தயவு செய்து இதனை மிகவும் முக்கியமானதொரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, உங்களுடைய வீடுகளின் விலாசங்களைக் கொடுத்து, அங்கு உங்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment