மைத்திரிபால சிறிசேனவின் விட்டுக் கொடுப்பின் காரணமாகவே பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவைத்தேடி வந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் 47 வருட கால அரசியல் வாழ்க்கை மற்றும் 25 வருடகால பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கௌரவிக்கும் வகையில் பொலன்னறுவையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளின் பின் அனுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர், ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரின் பெயர்களோடு மைத்திரிபாலவின் பெயரும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது.
அப்போது கட்சியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவுக்கே இருந்தது. அதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொலன்னறுவைக்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பினார்.
உடனடியாக கொழும்பு வந்து பிரதமர் பதவியைப் பொறுப்பெடுக்க தயாராகுமாறும் மைத்திரிபாலவுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துவிட்டார். மேலும் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் மஹிந்த ராஜபக்சதான், அவரையே நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் பெருந்தன்மையாக கூறிவிட்டார்.
அத்துடன் ஆளுனர் அலவி மௌலானா தனிப்பட்ட முறையில் சந்திரிக்காவுக்கு அளித்த நெருக்குதல் என்பன எல்லாம் சேர்ந்து தான் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியது. அந்த வகையில் தன்னைத் தேடி வந்த பதவி, அதிகாரத்தை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்த பரந்த மனப்பான்மை கொண்டவர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன.
அவரது தியாக குணம் இன்றைய அரசியல்வாதிகள் யாரிடமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராட்டியுள்ளார்.
Post a Comment