நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் தானியல் றெக்ஷயன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. றெக்ஷயன் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ரெக்ஷயனின் மனைவி அனிதா மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகிய மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். முன்னர் தற்கொலை என தெரிவிக்கப்பட்ட போதும் உடற்கூற்று பரிசோதனையின்போது றெக்ஷயன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது. இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment