7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு ‘லீக்’ ஆட்டம், இரண்டு ‘பிளே ஆப்’ ஆட்டம் ஆக மொத்தம் 4 போட்டி நடத்தப்படுகிறது. சென்னை–பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் 18–ந்தேதியும், சென்னை– ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டம் 22–ந்தேதியும் சென்னையில் நடக்கிறது.
‘பிளே ஆப்’ சுற்றில் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் 27–ந்தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 28–ந்தேதியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருக்கும் 2 பிளே ஆப் ஆட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை வீரர்கள் ஆடுவதால் சென்னையில் நடைபெறும் ‘பிளே ஆப்’ ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மலிங்கா (மும்பை), திசாரா பெரைரா (பஞ்சாப்) முரளிதரன் (பெங்களூர்) ஆகிய 3 இலங்கை வீரர்கள் தான் ஐ.பி.எல்.லில் ஆடி வருகிறார்கள். இதற்கிடையே ஜூன் 1–ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதற்காக அறிவிக்கப்பட்டு இருந்த இறுதிப்போட்டி சென்னைக்கு மாற்றப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஆனால் இறுதி போட்டியில் மும்பையில் தான் நடைபெறும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மும்பை சங்கத்தின் துணை தலைவர் ரவிசவாந்த் கூறும்போது, கவாஸ்கரும் (கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் ஐ.பி.எல்) ரஞ்சிப் பிஸ்வாலும் (ஐ.பி.எல். சேர்மன்) இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் தான் நடைபெறும் என்பதை உறுதி அளித்துள்ளனர் என்றார்.
Post a Comment