சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சுத்தமாக தமிழே தெரியாத நடிகைகளாக நடிப்பதால் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் டயலாக் சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்கவே பெரிய அவதிப்படுகிறார்கள் டைரக்டர்கள்.
அதன்காரணமாக, அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்து கும்பிடு போட்டு அனுப்பி வைத்து விடுகிறார்கள். அந்தவகையில், அவர்களிடமிருந்து சரியான நடிப்போ, லிப் மூவ்மென்டோ இல்லாதபோதும், அதன்பிறகு டப்பிங் பேசுபவர்கள்தான் அதை சரி பண்ணி அவர்களது கேரக்டருக்கே உயிர் கொடுத்து வருகிறார்கள்.
இதில், 40 படங்களுக்கு மேல் நடித்து விட்ட அனுஷ்கா இப்போதுவரை டப்பிங் பேசியதில்லை. ஆனால், அவரை இப்போது அஜீத்துடன் நடித்து வரும் படத்தில்தான் கண்டிப்பாக டப்பிங் பேச வேண்டும் என்று அப்பட டைரக்டர் கெளதம்மேனன் கூறியுள்ளார்.
அதையடுத்து, தான் நடித்த காட்சிகளின் டயலாக் பேப்பரை ஒரு காப்பி கைவசம் வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து வருகிறார் அனுஷ்கா. அதையடுத்து, சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாராவையும் அப்பட டைரக்டரான பாண்டிராஜ் டப்பிங் பேசுமாறு கூறியுள்ளாராம்.
சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனபோதும் இதுவரை டப்பிங் ஏரியா பக்கமே நயன்தாரா தலைவைத்துகூட படுத்ததில்லை. தான் நடித்து முடித்ததும் அந்த படம் வெளியானதா? இல்லையா? என்பதைப்பற்றிகூட விசாரிக்க மாட்டார்.
அப்படி இருந்தவரை இப்போது பாண்டிராஜ் டப்பிங் பேச சொன்னபோது, எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று இழுத்தாராம். அவரோ, உங்களுக்கு நீங்களே பேசினால் உங்கள் நடிப்பு இன்னும் மெருகேறும். அந்த கேரக்டரும கூடுதல் பலம் பெறும் என்று நயன்தாராவின் மனசை கரைத்துள்ளார். ஆக, அனுஷ்காவைத் தொடர்ந்து நயன்தாராவும் முதன்முறையாக தனக்குத்தானே டப்பிங் பேசுகிறார்.
மேற்படி நடிகைகளின் நிஜக்குரலின் சுயரூபம் விரைவில் ரசிகர்களுக்கு தெரியப்போகிறது.
Post a Comment