தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார்.
பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிடி கைமாறும் போது, பார்த்திபன் தானே காரிலிருந்து இறங்கி, அந்தக் கடைக்குச் சென்று, சிடி விற்பவரை கையும் களவுமாக பிடிக்கிறார்.
மேலும், அந்தக் கடையில் சமீபத்தில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் சி.டிக்களும் கிடைக்கும் என்பதையும் பார்த்திபன் தெரிந்து கொள்கிறார். பார்த்திபனைக் கண்டதும் கூட்டம் சேர, தனக்குத் தெரிந்த அதிகாரியையோ நண்பரையோ போனில் அழைத்து அங்கு நேரில் வருமாறு அவர் கேட்கிறார்.
அண்மையில் நடந்த தனது திரைப்படத்தின் வெற்றிவிழாவில், பார்த்திபன் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்க'ம் படத்தின் டி.விடியை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்து வருத்ததோடு பேசினார். சமீபத்தில் தான் நடிகர் விஷால் இதேபோல் கேபிள் டிவியில் புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆப்பரேட்டரை கையும் களவுமாக பிடித்த வீடியோ 'மலரும்' வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
Post a Comment