சீனாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு பணிகளில் அப்பிள் நிறுவனத்தின் வன்பொருட்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேஸ்புக், யாகூ, கூகுள், மைக்ரோசொவ்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகளையும், அந்நாட்டின் தலைவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்த ரகசியத்தை முன்னாள் சி.ஐ.ஏ, என்.எஸ்.ஏ உளவாளியான எட்வேட் ஸ்னோடென் அம்பலப்படுத்தினார். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தகவலால் கடும் நெருக்கடிக்கும், எதிர்ப்பிற்கும் உள்ளான அமெரிக்கா நாட்டின் அதிபர் ஒபாமா, இச்செயலுக்காக வருத்தம் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதேநேரம், இத்தகைய உளவு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள முடியாது என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்காவின் இந்த உளவு நடவடிக்கைகளிலிருந்து தங்களது நாட்டின் ரகசியங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவின் உளவு பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மிகப்பெரும் வன்பொருள் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை சீன நாட்டின் அரசு பணிகளில் பயன்படுத்துவதை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் அப்பிள் நிறுவனத்தின் வன்பொருட்களை அரசுப் பணிகளுக்காக கொள்முதல் செய்வதையும் நிறுத்திக் கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி சீன நாட்டின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியன அப்பிள் நிறுவனத்தின் ஐ பாட், ஐ பாட் மினி, மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் பிரோ உள்ளிட்ட சாதனங்களை கொள்முதல் செய்யும் பட்டியிலிருந்து அவற்றை நீக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை சீன நாட்டின் மத்திய மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அரசின் அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவின் மூலம் அப்பிள் நிறுவன பொருட்களை கொண்டு சீன அரசின் நடவடிக்கைகளை அமெரிக்கா உளவு பார்ப்பதை தடுத்து நிறுத்த முடியும் என சீனா கருதுகிறது.
Post a Comment