மலர்கள் அத்தனையுமே அழகானவைதான். சில மலர்கள் திரும்பிப்பார்த்து ரசிக்க வைக்கும். அவற்றில் ஒன்று சூரியகாந்தி. சூரியகாந்தி காலையில் உதயமாகும் சூரியனோடு மலர்ந்து சூரியன் மறையும் போது தானும் வாடி விடுவதை அனைவரும் கண்டும், கேட்டும் வருகிறோம்.
இதுவரை சூரியஒளி சூரியகாந்தி செடியில் மறைந்துள்ள ஒரு சக்தியை தூண்டி விடுவதால் பூ மலருகின்ற ஒரு அபூர்வமான செயல் நடப்பதாக நாம் இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இப்போது அறிவியலாளர்கள் வேறு தகவலைச் சொல்கிறார்கள். டேவிஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக தாவர அறிவியலாளர்கள் ஹாகோப் அடாமியன் மற்றும் ஹார்மர் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவித்துள்ளனர்.
சூரியகாந்தி செடிகள் ஒளிக்கு எதிர்வினை ஆற்றவில்லை. அவற்றினுள் இயற்கையால் பொதிந்து வைக்கப்பட்டுள்ள உயிரியல் கடிகாரத்தின் தூண்டுதலின்படி அவை செயல்படுகின்றன என்று நேச்சர் என்ற அறிவியல் இதழில் எழுதியுள்ளார்கள். இவர்கள் செய்த சோதனையில் சூரிய ஒளியில் வளர்க்கப்பட்ட சூரியகாந்தி செடிகள் நிரந்தரமாக வெளிச்சம் தரும் மின்விளக்கு பொருத்தப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டன.
அவர்கள் வியக்கும் வகையில் சூரியன் உதித்து மறைவது போல் இவையும் இயல்பாக காலையில் பூத்து மாலையில் வாடின. பூக்களின் முகமும் எதுவும் நடவாதது போல் திசை மாறித் திரும்பின. இது பல நாட்களுக்கு நடந்தது. எனவே இவை ஒளியின் திசைக்கு மட்டும் எதிர்வினை ஆற்றவில்லை, மாறாக தங்களுடைய நேரக்காவலருக்கும் எதிர்வினையாற்றுகின்றன என்று இதழில் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியகாந்தியின் தண்டின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை விட துரிதமாக வளரும் போது அது மறுபுறத்தில் வளைவதையும் கண்டுள்ளார்கள் உதாரணமாக தண்டு மேற்கு பக்கமாக அதிக வளர்ச்சி அடைந்தால், அது கிழக்கு பக்கமாக வளைகிறது.
Post a Comment